Tuesday, August 28, 2012

தாத்தா பாட்டு



ஓடி விளையாடலாந்தான் – என்
ஹோம்வொர்க்கை யாரு செய்வா தாத்தா?
கூடி விளையாடலாண்னா – நான்
குடும்பத்தில் ஒத்தப்புள்ள தாத்தா!

சின்னஞ்சிறு குருவி போல... – நான்
குருவியே பாத்ததில்லை தாத்தா!
வண்ணப் பறவைகளைக் கண்டு... – அதுக்கு
வண்டலூரு போகணுமே தாத்தா?

கொத்தித் திரியுமந்த கோழி... – கறிக்கடை
கூண்டுக்குள்ள பாத்திருக்கேன் தாத்தா!
எத்தித் திருடும் அந்த காக்காய்... – அதுக்கு
எப்பவாச்சும் சோறு வைக்கும் எங்காத்தா!

பாலைப் பொழிவது பசுவா? – அய்யே...!
அது பாக்கெட்டுலதான் கெடைக்கும் தாத்தா!
வாலைக் குழைத்து வரும் நாய்தான்.. – அது
வாங்க முடியாத விலை தாத்தா!

பொய் சொல்லக் கூடாதா தாத்தா? – அப்ப
பொழைக்கவே முடியாதாம் தாத்தா!
தெய்வம் நமக்கு துணையா தாத்தா? – அதையே
திருடிட்டு போறாங்களே தாத்தா?

பாதகம் செய்யறவங்க எல்லாம் – பெரிய
பதவியில் இருக்காங்க தாத்தா!
அட மோதறதை விடு தாத்தா! – அவன்
நம்மை முடிச்சிடுவான் மொறைச்சு பாத்தா!

சாதிகள் இல்லியா தாத்தா? – ஸ்கூல்ல
சாதி சர்ட்டிபிகேட் கேட்டாங்களே தாத்தா?
நீதி உயர்ந்த மதி கல்வி – ஆனா
அதுக்கு நெறைய செலவாகுது தாத்தா!

காலை எழுந்தவுடன் பரபரப்பு! – பின்பு
கழுதை போல் பொதி சுமப்பு
மாலை முழுதும் ஹோம்டியூஷன் – என்று
வழக்கப் படுத்திட்டாங்க தாத்தா!

No comments:

Post a Comment