Tuesday, August 28, 2012

தாத்தா பாட்டு



ஓடி விளையாடலாந்தான் – என்
ஹோம்வொர்க்கை யாரு செய்வா தாத்தா?
கூடி விளையாடலாண்னா – நான்
குடும்பத்தில் ஒத்தப்புள்ள தாத்தா!

சின்னஞ்சிறு குருவி போல... – நான்
குருவியே பாத்ததில்லை தாத்தா!
வண்ணப் பறவைகளைக் கண்டு... – அதுக்கு
வண்டலூரு போகணுமே தாத்தா?

கொத்தித் திரியுமந்த கோழி... – கறிக்கடை
கூண்டுக்குள்ள பாத்திருக்கேன் தாத்தா!
எத்தித் திருடும் அந்த காக்காய்... – அதுக்கு
எப்பவாச்சும் சோறு வைக்கும் எங்காத்தா!

பாலைப் பொழிவது பசுவா? – அய்யே...!
அது பாக்கெட்டுலதான் கெடைக்கும் தாத்தா!
வாலைக் குழைத்து வரும் நாய்தான்.. – அது
வாங்க முடியாத விலை தாத்தா!

பொய் சொல்லக் கூடாதா தாத்தா? – அப்ப
பொழைக்கவே முடியாதாம் தாத்தா!
தெய்வம் நமக்கு துணையா தாத்தா? – அதையே
திருடிட்டு போறாங்களே தாத்தா?

பாதகம் செய்யறவங்க எல்லாம் – பெரிய
பதவியில் இருக்காங்க தாத்தா!
அட மோதறதை விடு தாத்தா! – அவன்
நம்மை முடிச்சிடுவான் மொறைச்சு பாத்தா!

சாதிகள் இல்லியா தாத்தா? – ஸ்கூல்ல
சாதி சர்ட்டிபிகேட் கேட்டாங்களே தாத்தா?
நீதி உயர்ந்த மதி கல்வி – ஆனா
அதுக்கு நெறைய செலவாகுது தாத்தா!

காலை எழுந்தவுடன் பரபரப்பு! – பின்பு
கழுதை போல் பொதி சுமப்பு
மாலை முழுதும் ஹோம்டியூஷன் – என்று
வழக்கப் படுத்திட்டாங்க தாத்தா!

Sunday, August 26, 2012

கலைந்த கனவு



பல்லவி 

காரணம்  இன்றி கலையும் கனவுபோல்
காதலும் ஒருநாள் கலைந்தது!
நான் கண்களுக்குள்ளே தீட்டிய ஓவியம்
கண்ணீர் மழையில் அழிந்தது!
கண்கள் மூடி காத்திருந்தால்
கனவுகள் மீண்டும் தொடர்வதில்லை!
கைகள் தவறிய காதலும் அதுபோல்
கனவிலும் மீண்டும் வருவதில்லை!                       (காரணம் )

சரணம் 

காதலன் இல்லை  என்பதனால்
காதல் இல்லை என்றாகிடுமா?
உன் கைகள் வரைந்த கடிதங்களென்ன
கரையான் தின்னும் காகிதமா?
உச்சியில் நீ இட்ட முத்தமொன்று
உதிராப் பருவாய் உறுத்திடுதே!
நான் உனக்காய் உதட்டில் தேக்கிய முத்தம்
உலராமல் இன்னும் ஊறிடுதே!                                (காரணம் )

சரணம் 

காதல் இல்லா இரவுகளை - என்னால்
கற்பனை  செய்யவும் முடியவில்லை!
காலையில் உன்முகம் பார்க்க இல்லையெனில்
கண்களைத் திறந்தும் பயனில்லை!
கடைசியாய் உன் கண்களைக் கண்ட நிமிடம்
காலம் முழுவதும் மறக்காது!
என் கற்பும் ஒருநாள் களவு போகலாம்
காதல் மட்டும் இறக்காது!