Sunday, March 18, 2012

மரண தண்டனை


(குமுதம் நாளிதழில் வைரமோதிர பரிசு பெற்ற சிறுகதை)

மணிமேகலை தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வெளுத்து எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பிணத்தைப் போல இருந்தது. அவள் மனம் முழுவதும் அவன் கூறிய வார்த்தைகள் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் அந்த நாலரை அடி கயிற்றுக் கட்டிலில் தன் ஆறடி உயரத்தை அடக்கி ஒரு கடுமையான நடன முத்திரை போல் படுத்துக்கிடந்தான். நிதானமான நிலையில் இது ஒரு மனிதனால் இயலாத காரியம். மிதமிஞ்சிய போதையில் மட்டுமே இது போன்ற விஷயங்கள் சாத்தியம்.

மணிமேகலை திரும்பி குழந்தையை பார்த்தாள். அந்த கிழிந்துபோன பாயில் அது ஒரு சிதைந்துபோன பொம்மை போல கிடந்தது. மணிமேகலை எழுந்து சென்று குழந்தையை தூக்கினாள், குழந்தைக்கும் ஜுரம் அடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து குழந்தையை திண்ணையில் படுக்க வைத்தாள். தெருவைப் பார்த்த பொழுது அது முழுவதுமாக அடங்கிவிட்டிருந்தது. பாதை முழுக்க மனிதர்களும் நாய்களும் அன்யோன்யமாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

மணிமேகலை திரும்ப வீட்டிற்குள் வந்து கதவை மூடித் தாளிட்டாள். நேற்று நான்கு மணிநேரம் குழந்தையையும் வைத்துக் கொண்டு வெய்யிலில் நின்று ரேஷனில் வாங்கிய மண்ணெண்ணெய் அந்த டின்னில் தயாராக இருந்தது. தீப்பெட்டியை தேடி எடுத்து தயாராக வைத்துக் கொண்டாள். மண்ணெண்ணெய் டின்னை கையால் தூக்கியபோது இது போதுமா என்ற சந்தேகம் எழுந்தது. போதும் என்பதாகத்தான் தோன்றியது. நிதானமாக கட்டிலுக்கு அருகில் வந்து தான் காதற்களிமணம் புரிந்த கணவனின் காலிருந்து மேலாக மண்ணெண்ணெயை ஊற்ற ஆரம்பித்தாள். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவன் இருந்த போதையில் இது போன்ற விஷயங்கள் அவனை துளியும் பாதிக்கவில்லை. ஆனால், தலையில் ஊற்றியபோது அவனுக்கு விழிப்புத் தட்டியது என்றாலும் என்ன நடக்கிறது என்பதை அவனால் சரியாக உணரமுடியவில்லை. முதலில் அவனுக்கு மணிமேகலையின் உருவம் தெளிவில்லாமல் தெரிந்தது. பிறகு ஒரு சிறிய தீப்பந்தம் தன்னை நோக்கி வருவதுபோல் தெரிந்தது. அதற்குள் அவன் உடல் முழுக்க உஷ்ணம் பரவ ஆரம்பித்துவிட்டது. அவன் தடுமாறி எழ நினைத்து தரையில் குப்புற விழுந்தான். அவன் கத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். கடைசியாக அவன் சுவாசித்த காற்றில் முடி கருகிய நாற்றம் நிறைந்திருந்தது.

************

நீதிபதி மணிமேகலையை உற்றுப் பார்த்தார். ஒரு செல்லரித்துப்போன சிறந்த ஓவியத்தின் மிக மோசமான பிரதியைப் போல அவள் இருந்தாள். கேஸ் கட்டைப் பிரித்துப் பார்த்தார். மணிமேகலை வயது 23 என்றிருந்தது. காயத்திரியைவிட ஒரு வயது குறைவு என்று நினைத்துக் கொண்டார்.

இந்தப்பக்கம் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டிருந்த மணிமேகலையின் பக்கத்து வீட்டுக்காரியான பழனியம்மாள் ஏதோ தான்தான் மணிமேகலைக்காக ஆஜரான வக்கீல்போல் பரிந்து பேசிக் கொண்டிருந்தாள்.
"சாமி, எங்க தெருவுல இருக்க வேண்டிய புள்ளயே இல்லங்க இது. ஏதோ பெரிய எடமுங்க. இந்த ராச்சசங்கிட்ட மாட்டிக்கிட்டு அது படாத வேதனையில்லீங்க. லாரிக்குப் போயிட்டு பத்து பதனஞ்சு நாள் கழிச்சு வருவான் வந்துட்டான்னா அடி ஒத தாங்க. அப்பக்கூட இந்தப்புள்ள வாய்விட்டு ஒரு வார்த்த எங்ககிட்ட பொலம்புனதில்லீங்க, பிரசவத்தப்பக்கூட அவன் ஊர்ல இல்லீங்க. ஏதோ சத்தம் கேக்குதுன்னு நான்தான் ஓடிப்போய் பாத்துட்டு நாலு பொம்பளையாளுங்கள கூப்புட்டு வீட்டுலயே அந்த சின்ன உசுர மீட்டுக் குடுத்தமுங்க, ஊர் பூரா கூத்தியா வெச்சுட்டு அலஞ்சாங்க அவன், அது தெரிஞ்சுகூட இந்தப்புள்ள வாய் தொறந்து ஒரு வார்த்த கூட கேட்டதில்லீங்க. இந்த அளவுக்கு இந்தப்புள்ள போயிருக்குன்னா இதுக்குமேல என்ன கொடும செஞ்சானோ தெரியலீங்களே" என்றாள். சொல்லி முடித்துவிட்டு முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டாள்.

மணிமேகலைக்கு ரொம்ப நேரமாக நிற்பது கஷ்டமாக இருந்தது. ஜுரம்  இன்னும் விட்டபாடில்லை. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலை என்றிருந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. வெளியே ஒரு பஸ் ஹார்ன் விட்டுவிட்டு அடித்த சத்தம் கேட்டது.

***********

மணிமேகலை பஸ் ஸ்டான்டில் ஒரு தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள். இன்று மட்டும் நேரம் மிக மெதுவாய் போவதாக தோன்றியது. அவள் கட்டியிருந்த பச்சை தாவணி மற்றும் பாவாடையை ஒரு முறை, சரி பார்த்துக் கொண்டாள் பாவாடை இன்னும் சரியாக காயவில்லை, நேற்று இரவு அவசரமாக துவைத்தது. காலையில் அம்மாகூட திட்டினாள். "ஏண்டி சரியா காயக்கூட இல்ல இத ஏண்டி கட்டிக்கிட்டு போற வேற பாவாடையா இல்ல ஒங்கிட்ட"

 இவள் "மேட்சிங்கா இல்லையேம்மா" என்று கூறிக்கொண்டே அந்த கடிதத்தை ஒரு முறை படித்துப் பார்த்தாள், "நேற்று நீ சிரித்தபோது உன் கன்னத்தில் விழுந்த சிகப்பு சிக்னலைக் கண்டு என் இதய என்ஜின் நின்றுவிட்டது. நாளை பச்சை தாவணியில் வந்து இயங்க மறுக்கும் இதயத்தை இயக்கி வைப்பாயா?" என்று கேட்டு எழுதியிருந்தது.

 அவளுக்கு மிகப்பரிச்சியமான அந்த ஹார்ன் சத்தம் கேட்டதும் சுறுசுறுப்பானாள்.அவன் தூரத்திலேயே அவளை கவனித்துவிட்டிருந்ததால் வண்டியை அவளின் மிக அருகில் கொண்டு வந்து ஒரு சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். அவள் வேண்டுமென்றே அவன் முகத்தைப் பார்க்காமல் பஸ்ஸில் ஏறி முன்பக்கமாக நின்றுகொண்டாள். அவன் சத்தமாக, "டேய் மயில்சாமி" என்று கத்தினான் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர் பின்னாலிருந்து, "என்ன ராஜன்" என்றான். அதற்கு அவன், "இன்னிக்கு சாயந்திரம் ரூமுக்கு வாடா ஒனக்கு சூப்பர் ட்ரீட் தர்ரேன்" என்றான். "என்ன விஷயம்ப்பா?" என்று கேட்டதற்கு "ரூமுக்குவாடா சொல்றேன்" என்றான். அந்த ட்ரீட் மயில்சாமி எழுதி கொடுத்த அந்த கடிதத்திற்குதான் என்பது அப்போது அவளுக்கு தெரியாது.

ஒருநாள் அண்ணாவுக்கு விஷயம் தெரிந்து, "அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் குடுத்தா ஒனக்கு சல்லாபத்துக்கு டிரைவர் கேக்குதா" என்றான். அண்ணா செல்லம் கொடுத்ததாய் அவளுக்கு நினைவில்லை. இவளுக்கு ஏழு வயதிருக்கும் போது அப்பா போனதிருந்தே அம்மாவையும் இவளையும் வேலைக்காரி போலத்தான் நடத்திவந்திருக்கிறான். மேலும் அவன் 'டிரைவர்' 'டிரைவர்' என்று இகழ்ந்து பேசியதாலேயே அவளுக்கு டிரைவர் வேலைதான் உலகின் உன்னதமான வேலையாக பட்டது.

திடுமென ஒரு நாள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இரவு பணிரெண்டரைக்கு ராஜன் ரூம் கதவை தட்டியபோது ராஜன் உண்மையிலேயே கலவரப்பட்டுத்தான் போனான். என்றாலும் சக நண்பர்களின் உற்சாகத்தினால் அடுத்தநாள் காலை 5-30 மணிக்கு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தேவிட்டது. கடைசிவரை இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்று ராஜன் சொல்க் கொண்டேயிருந்தான்.

அண்ணா பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, "நீ செத்துப் போயிட்டதா நெனச்சுக்கறேன்" என்று சொல்லியபோது கூட ஒரு லட்சரூபாயை மிச்சப்படுத்திய சந்தோஷம் எவ்வளவு மறைத்தும் அவன் முகத்தில் தெரிந்தது. இங்கிருந்தால் வேறு பிரச்சனைகள் வரலாமென வடக்குப்பக்கம் மாற்றல் வாங்கிக்கொண்டு அம்மாவையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அம்மாவுக்கு அவளைப்பற்றிய அக்கறையைவிட அண்ணாவின் தேவை அதிகமாக இருந்தது.

தான் தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டி ஒரு டீக்கடையை இடித்து நொறுக்கியதும், அதற்காக சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்த ஆபிஸரை வேலைவிட்டு வரும்போது அடித்த அடியில் அவருக்கு கால் உடைந்ததும், அதனால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதும், மணிமேகலையை கல்யாணம் செய்த வேளைதான் என்ற மிகச்சரியான காரணத்தை ராஜன் ஆறு மாதத்திற்குள் கண்டுபிடித்துவிட்டான். கொஞ்சநாள் யூனியன் பெயரைச் சொல்லிச் சுற்றிக் கொண்டிருந்தவன் கையில் காசு தீர்ந்தவுடன் லாரிக்குப் போக ஆரம்பித்தான்.

மணிமேகலை தான் பாதியில் கைவிட்ட பாலிடெக்னிக் படிப்பினால் ஒரு புண்ணியமுமில்லை என்று பக்கத்து மில் ஒன்றிற்கு வேஸ்ட் காட்டன் பிரிக்கும் வேலைக்கு தினக் கூலியாக போக ஆரம்பித்தாள். முதலில் கர்ப்பம் என்று தெரிந்தபோது கலைத்துவிடலாமா? என்று கூட யோசித்தாள். தன்மேல் அன்பு காட்டும் ஒரு உயிர்கூட உலகத்தில் இல்லையே என்பது நினைவுக்கு வரவே எப்படியும் வளர்த்துவிடலாம் என்று பெற்றுக் கொண்டாள்.

***************

நீதிபதி மணிமேகலையை பார்த்து, "நடந்த இந்த கொலையைப் பத்தி நீ சொல்ல விரும்பறத சொல்லலாம்" என்றார். மணிமேகலை மௌனமாக இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நீதிபதி, "இப்படி நீ மௌனமா இருக்கறதே உனக்கு மரணதண்டனை வாங்கிக் கொடுத்துடும்ங்கறது உனக்கு தெரியுமா? நீ உன்னுடைய நியாயத்தை எடுத்து சொன்னா அது சட்டப்படி உனக்கு கிடைக்க இருக்கும் மரணதண்டனையிருந்தாவது உன்னை காப்பாத்தலாம் இல்ல" என்றார்.

மணிமேகலை நீதிபதியை நிமிர்ந்து பார்த்தாள், "நான் உண்மையை சொன்னா கண்டிப்பா என்னை மரண தண்டனையிருந்து காப்பாத்திடுவீங்களா?" என்று கேட்டாள். நீதிபதி ஏற்கனவே அவளின் வயதையும் குழந்தையையும் மனதில் கொண்டு அவளுக்கு மரண தண்டனை கொடுப்பதில்லை என்று தீர்மானித்திருந்தார் என்றாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "சட்டப்படி என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்றார். மணிமேகலைக்கு எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

************

மணிமேகலைக்கு ஜுரம் ஒரு வாரமாக விட்டாபாடில்லை. அவளும் மருந்துக் கடையில் கேட்டு சில மாத்திரைகளை சாப்பிட்டிருந்தாள். இன்று வேலைக்குக்கூட போகமுடியாத அளவுக்கு அசதியாக இருந்தது. கையில் பதினைந்து ரூபாய்தான் இருந்தது. பழனியம்மாள்தான், "இதப்பாரு கண்ணு இங்க பக்கத்தில் இருக்கற பெரியாஸ்பத்திரில புதுசா ஒரு டாக்டரம்மா வந்துருக்குது சிரிச்சு சிரிச்சு பேசுது, நல்லா பாக்குது, போயி காட்டிட்டுவா கண்ணு, எதுனாலும் வெஷ ஜொரமா இருக்கப்போவுது" என்றாள்.

மணிமேகலை போனபோது ஆஸ்பத்திரியில் அதிகமாக கூட்டமில்லை. ஆறாவது ஆளாக டாக்டரை பார்த்துவிட்டாள்.
டாக்டர், "எத்தனை நாளா இந்த ஜுரம் இருக்குது?" என்று கேட்டாள்.

"பத்து நாளாங்க"

"ஏன் இவ்வளவு நாளா வரலை"

"கடையில மருந்து வாங்கி சாப்பிட்டேன், கேக்கல"

"சரி, இதுல யூரின், ப்ளட் டெஸ்ட்டுக்கு எழுதியிருக்கறேன் 11ம் நம்பர்ல குடுத்தா டெஸ்ட் எடுப்பாங்க ரிசல்ட்டை வாங்கிட்டு வந்து என்னப் பாரு"

டெஸ்ட் எடுக்குமிடத்தில் 12.30க்கு மேல்தான் ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்விட்டார்கள். மணிமேகலைக்கு வெய்யில் வீடுவரை போய்வருவது கஷ்டமாக இருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு டீக்கடையில் ஒரு பால் வாங்கி ஆற்றி குழந்தைக்கு கொடுத்துவிட்டு தானும் ஒரு டீயை
குடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

பன்ணென்டரைக்கு போனபோது டெஸ்ட் எடுத்தவன் "உன்னை பெரிய டாக்டர் வரச் சொன்னாங்க" என்றான். ரிசல்ட் கேட்டதிற்கு அவர்களிடமே இருப்பதாக சொன்னான்.

பெரிய டாக்டர் மணிமேகலையை பார்த்து, "ஒன் புருஷன் கூடவரலியா" என்றார்.

"அவரு லாரி டிரைவருங்க, வெளியூர் போயிருக்காருங்க"

"கொழந்தைக்கு என்ன வயசாகுது"

"ஒண்ணரை வயசுங்க"

"கல்யாணம் ஆயி எத்தன வருஷம் ஆவுது"

"நாலு வருஷம் ஆச்சுங்க"

"கொழந்தைக்கும் ஒரு டெஸ்ட் எழுதித்தர்றேன் எடுத்துக்கிட்டு வந்துடு"

"குழந்தைக்கு ஜ÷ரமில்லீங்களே"

"எதுக்கும் எடுத்துறுவம்" என்றவர், "ஒடனே ரிசல்ட் குடுத்துடுவாங்க எங்கேயும் போகவேண்டாம்" என்றார்.

அதேபோல் குழந்தைக்கு இரத்தம் எடுத்து அரைமணிக்குள் ஒரு வெள்ளை சட்டைக்காரன் வந்து, "நீதான் மணிமேகலையா பெரிய டாக்டரம்மா கூப்பிடுறாங்க" என்றான்.

பெரிய டாக்டர் முகத்தில் இருந்த தயக்கம் இவளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. டாக்டர் அவளை நேராக பார்க்காமல், "உன் புருஷனை வரச்சொல்ரியா?" என்றார்.

"அம்மா அவர் எப்ப வருவார்னே தெரியாதுங்க, எதுவா இருந்தாலும் எங்கிட்டயே சொல்லுங்க" என்றாள்.

"நீ என்ன படிச்சிருக்கே?"

"பாலிடெக்னிக் பாதியில நின்னுட்டங்க"

டாக்டர் ஒன்றும் பேசாமல் இரண்டு ரிசல்ட் பேப்பர்களையும் அவள் கையில் கொடுத்தாள்.

**************

மணிமேகலை விளக்கு கூட ஏற்றாமல் வீட்டின் வாசலேயே உட்கார்ந்திருந்தாள், செல்வன் வந்தான் அவனை பார்த்தவுடனே ராஜன் வந்துவிட்டதுஅவளுக்குத் தெரிந்தது. செல்வன் ஆட்டுக்கறியை அவளிடம் கொடுத்துவிட்டு, "அக்கா, அண்ணன் ராத்திரிக்கு வீட்டுக்கு வந்துர்றதா சொன்னாரு" என்றான்.

மணிமேகலை பேசாமலிருந்தாள், செல்வன் கொஞ்சம் தயங்கிக்கொண்டே சொன்னான், "அக்கா தப்பா நெனச்சுக்காதீங்க நான் அண்ணங்கிட்டிருந்து நின்னர்லாம்னு இருக்கேன், நாளையிருந்து வேற வண்டிக்குப் போகப் போறேன்" என்றான்.

மணிமேகலை ஒன்றும் பேசவில்லை. அவனே தொடர்ந்து, "உங்ககிட்ட சொல்லவேணாமுன்னுதான் நெனச்சேன். உங்க மூஞ்சிய பாத்துட்டு சொல்லாம இருக்க முடியலக்கா, அண்ணன் இப்பல்லாம் பொம்பளங்க விஷயத்துல ரொம்ப மோசமாயிட்டார்க்கா, ஊருக்கு ஊரு வண்டிய நிறுத்திடரார்க்கா, என்னமோ வெறிபுடுசாப்பல நடந்துக்கறார்க்கா, ரொம்ப குடிக்கிறாரு, கேட்டா பயங்கரமா அடிக்கிறார்க்கா..."

*************

இரவு ராஜன் வீட்டிற்கு வரும்போதே நிறையக் குடித்திருந்தான். மேலும் ஒரு பாட்டில் வேறு வாங்கி வந்திருந்தான். மணிமேகலையை பார்த்து, "என்னடி புருஷன் வந்தா வான்னுகூட கூப்பிடமாட்டியா? எங்கியோ மூலையில உக்காந்திருக்க வந்து சோறுபோடுடி" என்றான்.

மணிமேகலை "நான் இன்னிக்கு சமைக்கல" என்றாள்.

"ஒரு கிலோ கறி வாங்கி குடுத்துவிட்டேன், சமைக்கலயா என்னடி உனக்கு கேடு?"

"எனக்கு உடம்பு சரியில்ல பெரியாஸ்பத்திரி போயிருந்தேன். டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு ஒங்களை நாளைக்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க"

அந்த போதையிலும் அவன் முகத்தில் கலவரம் தென்பட்டதை மணிமேகலை தெளிவாக பார்த்தாள்.

"எதுக்கு?" என்றான்.

"ஏன் ஒங்களுக்கு தெரியாதா?" என்றாள்.

அவன் முகம் இறுகியது, "தெரியுண்டி ஆறுமாசம் முன்னாடியே தெரியும், அதுனாலதான் என்னால முடிஞ்ச அளவுக்கு நாட்டுக்கு உபகாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன், முந்தா நாள் சேலத்துல ஒரு அயிட்டம் தொழிலுக்குப் புதுசு 15 வயசுதான் இருக்கும். இந்நேரம் அம்பதுபேர் போயிருப்பான்" என்று சொல்விட்டு விகாரமாக சிரிக்க ஆரம்பித்தான்,
கொண்டுவந்த பாட்டிலை திறந்து அப்படியே கவிழ்த்துக் கொண்டு கயிற்றுக் கட்டில் படுத்தான். "விடமாட்டேன்.... என்னால முடிஞ்ச வரைக்கும்..." என்று புலம்பிக் கொண்டே கிடந்தான்.

*************

மணிமேகலை நீதிபதியை பார்த்து, "அய்யா உண்மையைச் சொன்னா மரணதண்டனையிருந்து காப்பாத்தறதா சொன்னீங்களே இந்தாங்கய்யா இந்த மரணதண்டனை உத்தரவை ரத்து செய்ய முடியுமா பாருங்க" என்று கூறி தன் ஜாக்கெட்டிற்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஆஸ்பத்திரி காகிதங்களை கொடுத்தாள்.

முதல் தாளில் மணிமேகலை வயது 23 எச் ஐ வி பாஸிட்டிவ் என்றும் இரண்டாவது தாளில் பாரதி வயது 1 எச் ஐ வி பாஸிட்டிவ் என்றும் எழுதி சிகப்பு மையினால் வளையமிடப்பட்டிருந்தது.

1994

*********************************************************************************

ராஜா வேஷம்





அது வழக்கமாக தூக்கத்திருந்து விழிப்பது போல்லாமல் மிக சுகமான ஒரு உணர்வாக இருந்தது. உடல்வலி துளியும் இல்லை, ஒரு வென்னீர் குளியலுக்குப் பின் கிடைக்கும் சுகம் போன்றதாய் இருந்தது. மனம் ஏதோ ஒரு மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது. இதுநாள்வரை நான் இத்தனை சுகமாய் உணர்ந்ததில்லை. ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் இந்த அறையை துல்லியமாக பார்க்க போதுமானதாய் இருந்தது. சுவர் கடிகாரம் மூன்று பத்து காட்டிக் கொண்டிருந்தது.

இன்னும் விடியவில்லை, இத்தனை காலைப்பொழுதில் பொதுவாய் நான் விழிப்பதில்லை. என் அன்றாட செயல்கள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிடப்பட்டவை. வழக்கமாக நான் இரவு பத்தரைக்குமேல் கண் விழித்திருப்பதில்லை. காலை ஆறு மணிக்குமேல் உறங்குவதும் கிடையாது. அந்த விதியெல்லாம் உடைந்தது ஒரு மாதம் முன்பு, அதிலும் இந்த ஒரு மாத காலமாய் அனுபவித்த உபாதைகள்...

அந்த விபத்துக்குப் பிறகு நேரம், காலம், நாள், கிழமை எல்லாம் போய்விட்டது. கண்விழிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு புதிய காட்சி போல் தோன்றும். அந்த இடம் ஒரு மருத்துவமனை என்பது மட்டும் அறிவுக்குப் புலப்படும் மற்றபடி புதிய முகங்கள், பழகிய முகங்கள் ஆங்காங்கே வந்துபோகும். பல நேரங்களில் பழகிய குரல்கள் அவரவர் உறவைப் பொறுத்து, "அப்பா", "மாமா", "பெரியப்பா" "இங்க பாருங்க" "யார் வந்துருக்கா பாருங்க?", "கண்ணை தொறந்து பாருங்க" என்பதாய் கேட்டுக் கொண்டேயிருக்கும். சிலசமயம் அந்தக் குரல்களின் தாளகதியே ஒரு தாலாட்டுப் போல உறக்கத்திற்குள் தள்ளிவிடும்.

உணர்வு ஓரளவு திரும்பியபோது அது இன்னும் நரக வேதனையாய் இருந்தது. திரும்பிப் படுக்கக்கூட ஒருவர் உதவி தேவைப்பட்டது. என் அந்தரங்கத்தில் யாருடைய குறுக்கீட்டையும் நான் அனுமதித்ததில்லை. குளிக்கும்போது என் முதுகு தேய்க்க நான் 'காமாட்சியை' கூட அனுமதித்ததில்லை. இப்போது வெள்ளை உடை அணிந்த ஒரு பெண் இயல்பாய் வந்து என் பிறப்புறுப்பை தூக்கி ஒரு பிளாஸ்டிக் சட்டியில் வைத்து "ஒன்னுக்கு வந்தா போங்க" என்கிறாள்.

என்னால் ஓரளவு பேச முடிந்தபிறகு இயன்றவரை எல்லோரையும் திட்டவாரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல (அவர்களுக்கும்) இதுபோன்ற வசவுகளினாலேயே நான் அலுவலகத்தில் அறியப்பட்டு வந்தேன். அரசாங்கத்தின் மிகப்பெரிய உத்யோகஸ்தன் என்ற அதிகாரம் எனக்கு இதற்கான அனுமதி வழங்கியிருந்தது. யாருமே என்னை எதிர்த்து பேசியதில்லை. அவர்கள் என் வசவுகளை பழகிக்கொள்ள பழகிக் கொண்டார்கள்.

வீட்டிலும் காமாட்சி எனக்கு ஒரு மனைவி போலல்லாமல் ஒரு காரியதரிசியாகத்தான் நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளைப் பற்றிய செய்திகள் அவள் மூலமாகத்தான் எனக்கு வந்து சேரும். அவையும் மிக அத்யாவஸ்யமான பணத் தேவைகளாய்தான் இருக்கும். மற்றபடி நான் வீட்டில் இருக்கும்போது யார் குரலும் உயர்ந்து கேட்டதாய் எனக்கு நினைவில்லை.

என் அதிகாரச் சட்டையை கழற்றவிடாமல் செய்து கொண்டிருந்தது எனக்கு கிடைத்து வந்த பதவி உயர்வுகள்தான். எளிதில் யாரும் அடையமுடியாத பதவி உயர்வுகளையெல்லாம் நான் அடைந்து கொண்டிருந்தது என் செயல்களுக்கான நியாயமாய் என்னுள் புதைந்துவிட்டது. 'மிஸ்டர் க்ளீன்' என்பது எத்தனை சுகமான வார்த்தை. அதுவும் என் மேலதிகாரியிடமிருந்து அதைக் கேட்க நான் என் தலையைக் கூடத் தரத் தயாராயிருந்தேன். இந்த ஒரு பாராட்டிற்காய் நான் தமிழகத்தின் மிக ஆபத்தான கலவரப்பகுதிகள் மற்றும் வறட்சிப் பகுதிகள் என்று தாறுமாறாக அலைக்கழிக்கப்பட்டு வந்தேன். இதை குறிப்புணர்த்திய என் சில நெருங்கிய நண்பர்களைக்கூட மிக மோசமான வார்த்தைகளால் காயப்படுத்தியிருக்கிறேன். இந்த போதையால் என் குடும்பமும் குழந்தைகளும் அலைக்கழிக்கப்படுவதை நான் உணரவேயில்லை, என்பதைத்தான் மிகச்சரியாக சொன்னான் ரகுபதி.

**************

ரகுபதி வீட்டின் கடைசிக் குழந்தை என்ற சலுகையை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டவன். அதேபோல் அந்த இடத்திற்கான இழப்புகளையும் முழுமையாக அனுபவித்தவன். அவன் பள்ளி இறுதி வகுப்பு முடித்தபோது கீர்த்திவாசன் ரிட்டையர் ஆகியிருந்தார். அத்துடன் தனக்கு கிடைத்த கிராஜுவிட்டி  மற்றும் தன் சேமிப்பை போட்டு ஒரு வீடு கட்டும் முயற்சியில் வேறு இருந்தார். இந்த நிதிச்சுமையில் அவன் படிப்புக்கு அவ்வளவாய் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. "எல்லாம் கரஸ்பாண்டன்ஸ்ல படிச்சு பாஸ் பண்ண சொல்லு, இவனெல்லாம் காலேஜ் போனா உருப்படமாட்டான்" என்று அவன் காதுபடவே அவன் அம்மாவிடம் சொல்விட்டார் கீர்த்திவாசன். அன்று அவன் முதல்முறையாக தண்ணியடித்தான்.

ரகுபதி படிப்பில் அத்தனையொன்றும் சூட்டிகையில்லை. ஆனால் பாலகிருஷ்ணன் அப்படியில்லை. அவன் இவனுக்கு ஒன்பது வயது மூத்தவன் அவன் பள்ளி இறுதித் தேர்வில் வாங்கிய மார்க்கிற்கு மேல்ஜாதியாக இல்லாமல் இருந்திருந்தால் மெரிட்டிலேயே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் என்றாலும் ஒரு தனியார் கல்லூரி இடம் தர ஒப்புக்கொண்டது. அதற்கு இரண்டாயிரம் ரூபாய் நன்கொடை கேட்டது.
"நேத்துதான் நம்ம சாமாராவுகிட்ட இதபத்தி பேசிகிட்டிருந்தேன். இந்த பிரைவேட் காலேஜுங்களை எல்லாம் இழுத்து மூடனும்னு. இன்னிக்கு நம்ம வீட்டுக்குள்ளயே வந்துருச்சா? ஒன் பையன்கிட்ட சொல்லு லஞ்சம் குடுத்தெல்லாம் இன்ஜினியர் ஆகவேண்டாம். கெடைக்கிற குரூப்ல ஜாயின் பண்ண சொல்லு"

பாலகிருஷ்ணன் சுபாவத்திலேயே அதிகம் பேசாதவன். பி.எஸ்ஸி ஃபிஸிக்ஸ் முடித்துவிட்டு ஒரு வருடம் ஒரு வேலையும் கிடைக்காமல் சுற்றி, ஒரு மெடிக்கல் கம்பெனியில் ரெப்ரசென்டேட்டிவ்வாக சேர்ந்துவிட்டான்.

***************

அகிலா அப்படி செய்யாமருந்திருந்தால் காமாட்சி இன்னும் கொஞ்சநாள் உயிரோடிருந்திருப்பாள். காமாட்சி உயிரோடிருந்திருந்தால் இப்போது இவ்வளவு அவஸ்தைப்பட தேவையில்லை என்று தோன்றுகிறது. அன்று கூட அகிலாவுக்காக ரகுபதிதான் பரிந்துகொண்டு வந்தான். அதுவே என் கோபத்தை மேலும், கிளறிவிட்டது.

"அக்கா அப்பிடி என்னப்பா பெரிசா தப்புப் பண்ணிட்டா? ஒங்ககிட்ட சொல்ல பயந்துட்டா, இப்பகூட ஒன்னும் இல்ல, ரிஜிஸ்டர் மேரேஜ்தான் ஆயிறுக்கு, நாமளே எல்லாரையும் கூப்பிட்டு ஒரு ரிஷப்ஷன்..."

"வாய மூடுறா நாயே, ஒங்கக்காளுக்கெல்லாம் ரிஷப்ஷன் ஒன்னுதான் கேடு, அதெல்லாம் குடும்பப் பொண்ணுங்களுக்குதான் இது மாதிரி ஓடுகாலிங்களுக்கு இல்ல"

அன்று நான் பேசிய வார்த்தைகள் இன்று எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. பெற்ற பெண்ணை அத்தனை கேவலமாக பேசியிருக்க வேண்டாம். ஒரு முறை மாப்பிள்ளை பெண்ணை வீட்டிற்கு அழைக்கலாம் என்ற காமாட்சியின் ஒரே ஒரு விருப்பத்தையும் அத்தனை நிர்தாட்சண்யமாக மறுத்திருக்க வேண்டாம்.

காமாட்சியின் சாவில்தான் கணேசன் என்னிடம் தயங்கி தயங்கி கேட்டான்
"மாப்பிள்ளை வந்திருந்தார் பாக்கலயா?"

அந்த வேளையில் கூட அவனை ஏதோ சொல்லி திட்டியது ஞாபகமிருக்கிறது. அன்று என் கண்ணெல்லாம் ரகுபதி மேருந்தது. அவன் மிக மோசமாக அழுது ரகளை பண்ணிக் கொண்டிருந்தான். தண்ணி அடித்திருப்பான்போல் தெரிந்தது.
"டேய், பாலகிருஷ்ணா" அவன எங்கியாவது இழுத்துட்டுப்போடா? பெரிய பெரிய ஆபிஸருங்கள்லாம் வந்திருக்காங்கள்ள" என்றேன்.

பாலகிருஷ்ணனும் அவனைப் பார்த்து பயப்படுவதுபோல் இருந்தது.
காமாட்சி போவதற்கு முன் செய்த புண்ணிய காரியம், பாலகிருஷ்ணன் கல்யாணத்தை முடித்தது. அதுவும் காமாட்சியின் தம்பி கணேசனின் பெண் என்பதால் கல்யாணத்திற்கு நான் ஒரு வெற்றிலை காம்பையும் கிள்ளவில்லை. கணேசனே ஓடி ஓடி எல்லாம் செய்தான். அப்படியும் C.T.O தங்கியிருந்த லாட்ஜுக்கு கார் அனுப்பவில்லை என்று மண்டபத்தில் அத்தனை பேர் எதிரில் அவனை திட்டினேன். அவனை ஒரு பெரிய மனிதனாக நான் என்றுமே நினைத்ததில்லை. ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், வீட்டில் நடந்த ஒவ்வொரு விசேஷத்திலிருந்து, காமாட்சியின் சாவுவரை அவன்தான் என் நிலையை சுமந்தவன்.

எல்லோரும் என்னை ஒரு பொக்கிஷமாகவல்லவா வைத்திருக்கிறார்கள். இதற்காய் நான் அவர்களுக்கென்று என்ன செய்தேன்? இதைத்தானே ரகுபதி அன்று கேட்டான்.

************

"ஹலோஙு ரகுபதி இருக்காருங்களா?"

"ம்... இல்லை"

"எப்ப வருவாருங்க?"

"அவன் எப்ப வருவான், எப்ப போவான்னு பாக்கறதுக்காக நான் இல்ல, இனிமே அவன்பேர சொல்க்கிட்டு எவனும் போன் பண்ற வேல வெச்சுக்காதீங்க, வைடா போன"

எனக்கு அத்தனை கோபம் வந்ததற்கு காரணம் இருந்தது. நான் அப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். தெருமுனையில் நான் வரும்போது ரகுபதி அங்கு நின்றுகொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை கவனிக்கவில்லை. அவன் நண்பன் ஒருவன் கவனித்து அவனிடம் சொன்னவுடன் என்னை பார்க்காதது போல் பக்கத்து சந்தில் நுழைந்துவிட்டான். மேலும் எனக்கு அத்தனை கோபம் வந்ததிற்கு காரணம் என்னுடன் ஸ்ரீதரன் நம்பியாரும் வந்திருந்ததுதான்.

*************

ரகுபதி வீட்டில் நுழையும்போதே கீர்த்திவாசன் குரல் உச்சஸ்தாயில் கேட்டது.

"இனிமே எவனாவது ஒன் பேர சொல்கிட்டு போன் பண்ணா நடக்கறதே வேற"

"யார் பண்ணது?"

"யார் பண்ணாங்கண்ணு சாருக்கு குறிச்சுவெக்கணுமோ?"

"யார் பண்ணாங்கன்னு கேட்க்கக்கூட பொறுமையில்ல, அப்புறம் ஏன் கத்துறீங்க"

"ஒனெக்கெல்லாம் எவன்டா பண்ணப்போறான் அதான், ஒங்கூட நின்னு சிகரெட் புடிக்கிறானுங்களே அதுல ஒரு பொறுக்கியாதான் இருக்கும், நம்பியார் வேற பாத்துட்டார். அவமானமா போச்சு, அவர் பையன் ஏஜிஸ் ஆபிஸ்ல ஆடிட்டர் தெரியுமா? ஒன்னவிட ஒரு வயசு சின்னவன்"

"ஆமா, அவங்கப்பா அவன கான்வண்ட்ல படிக்க வெச்சாரு, அதோட இன்ஃப்லூயன்ஸ் யூஸ் பண்ணி வேலையும் வாங்கிக் குடுத்தாறு. நான் பிளஸ்2 முடிக்கறதுக்குள்ள எட்டு ஸ்கூல் மாறுனேன் எல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல்"

"நல்ல ஸ்கூல்ல சேத்திருந்தா மட்டும் கிழிச்சிறுப்பையோ? ஏறுற மண்டைலதாண்டா ஏறும்"

"ஆமா நான்தான் முட்டாள், அண்ணனையாச்சும் என்ஜினியரிங் படிக்கவெச்சுருக்கலாமில்ல அவனுக்காக இல்லேன்னாலும் ஒங்க ஸர்கிள்ல பெருமையடிச்சுக்கவாவது ஒதவியிருக்குமுல்ல, என் பையன் என்ஜினியர்னு"

"மூடுறா வாய நாயே... எங்கப்பன் ஒன்னும் என்னை பணங்குடுத்து படிக்கவெச்சு வேல வாங்கித்தரல நானே சொந்தமா படிச்சு என்னோட சுய முயற்சியிலதான் இந்த நெலமைக்கு வந்தேன்"

"நீங்க டிகிரி முடிச்சப்ப வேல கெடைக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை, இன்னிக்கு லட்சக் கணக்கானபேர் டிகிரி முடிச்சிட்டு வேலையில்லாம அலையறாங்க, ஒங்க டிகிரி சர்டிபிகேட்ட எடுத்துக்கிட்டு இப்ப இண்டர்வியூ போயி பாருங்க அப்ப தெரியும்"

"தெண்டச்சோறு திண்ணு திண்ணு ஒடம்புல கொழுப்பேறிப்போச்சோ?"

"புள்ளைக்கு சோறு போடறதே கஷ்டம்னு இருந்தா ஏன் பெத்துக்கணும்? அதுவும் இத்தனை வயசுக்கப்புறம்"

அந்த வார்த்தை கீர்த்திவாசனை மிக மோசமாக தாக்கிவிட்டது. முதலில் தலையில் ஏதோ ஒரு வவி விண்விண் என்றது. அந்த எரிச்சலும் சேர அங்கு பக்கத்திருந்த ஒரு டார்ச் லைட்டை எடுத்து ரகுபதியை அடிக்க ஓடிவந்து, கால்தவறி நடு ஹாலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். விழுந்தவுடன் வலதுபக்க கையையும் காலையும் அசைக்க முடியவில்லை. மரத்துவிட்டதுபோல் இருந்தது. தரையில் மிக மோசமாக நெளிந்து கொண்டிருந்தார்.

ரகுபதி மிகவும் பயந்துவிட்டான். ஓடிப்போய் தூக்கும்போதுகூட, "விடுறா பிச்சைக்கார நாயே" என்று திட்டிக் கொண்டிருந்தார். ரகுபதி அதை
பொருட்படுத்தாமல் அவரை தூக்கி சோபாவில் உட்கார வைத்தபோது, அவரால் சரியாக உட்கார முடியவில்லை என்பது தெரிந்தது. அப்படியே சாய்த்து படுக்கவைத்துவிட்டு பக்கத்து வீட்டு டாக்டர் மாமாவை கூப்பிட ஓடினான்.

டாக்டர் சிதம்பரம் கீர்த்திவாசனின் பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் நெருங்கிய நண்பர். அவர் பரிந்துரை செய்த ஹாஸ்பிட்டலில் கீர்த்திவாசன் அட்மிட் செய்யப்பட்டார். பாலகிருஷ்ணனும் அந்த ஹாஸ்பிடலில் தனக்கு தெரிந்த டாக்டர் நண்பர்களையெல்லாம் அணுகி தன் உத்யோகத்தின் பலனை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டிருந்தான்.

"ஹெவி ப்ளட் ப்ரஷர்ல இந்த மாதிரி ப்ரைன் ஹெமரேஜ் ஆகறது உண்டு. அதோட உங்கப்பாவுக்கு ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன்... ஏஜ் என்ன ஆகுது?" என்று கேட்டார் சிதம்பரம்.

"செவன்டி த்ரீ சார்" என்றான் பாலகிருஷ்ணன்.

"கொஞ்சம் கஷ்டம்தான்... பாக்கலாம்" என்றார் சிதம்பரம்.

பதினோரு நாட்கள் ICU வில் இருந்துவிட்டு பனிரெண்டாம் நாள்தான் பேசினார் கீர்த்திவாசன். அதுகூட உடம்பை சுத்தம் செய்த அந்த வார்டுபாயை வலி காரணமாக திட்டிய திட்டாகத்தான் இருந்தது. அதன்பிறகு பிரஞை வருவதும் போவதுமாக இருந்தது. சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் வீட்டிற்கு வந்து மூன்று நாட்களாகின்றன.

**************

என் செல்வாக்கை பயன்படுத்தி எத்தனையோ நண்பர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித்தந்திருக்கிறேன். அது என் ஈகோவின் விருப்பமான உணவாக இருந்தது. என் பிள்ளைக்கு வேலை கொடுங்கள் என்று கேட்பது அதற்கு கசப்பான மருந்தாய் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது அவன் படிப்பைக் கெடுத்தது நான்தான் என்பது தெளிவாக தெரிகிறது. அந்தத் தார்மீக கோபம் அவனுக்குள் இருப்பது நியாயம்தானே? பாலகிருஷ்ணன் கூட இன்று ஒரு நல்ல கம்பெனியில் இன்ஜினியராக இருந்திருப்பான். அகிலா... யோசித்தால் அவள் முகம்கூட நினைவுக்கு வர மறுக்கிறது. அத்தனை நெருக்கம் எனக்கும் அவளுக்கும். அவள் என்னுடைய மகள் என்ற ஒரே காரணத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாள். இத்தனை நாளாய் ஏன் என் அறிவுக்கு இதெல்லாம் விளங்கவில்லை. இன்று என்ன நேர்ந்தது. என்னவோ ஒன்று என்னிடமிருந்து அகன்றுவிட்டதாய் தெரிகிறதே என்ன அது?

கடிகாரம் இப்போது ஐந்தரை காட்டிக் கொண்டிருந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ரகுபதி உள்ளே வந்தான். என் அருகில் வந்து என்னை உற்றுப் பார்த்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கலவரம் தெரிந்தது. வேகமாக அறையைவிட்டு வெளியேறி விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்தில் சிதம்பரம், ரகுபதி, பாலகிருஷ்ணன் எல்லோருமே அறைக்குள் வேகமாக நுழைந்தார்கள். சிதம்பரம் என் கையை பிடித்துப் பார்த்தார். திரும்பி பாலகிருஷ்ணனிடம் "போயிருச்சுப்பா... கை நல்லா சில்ட்டுப்போச்சு மூணு மூணரை வாக்குல உயிர் பிரிஞ்சிறுக்கும்னு நெனக்கிறேன்" என்றார்.

*********************************************************************************



Friday, March 16, 2012

கேப்ஸ்யூல்

அந்த 'பார்' சிவாவுக்கு முற்றிலும் அன்னியமாக இருந்தது. அது ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் 'பார்' என்பதாலும், அது அமைந்திருந்த இடம் பெங்களூரின் ஒரு பிரதான சாலை என்பதாலும் மட்டுமே இந்த அன்னிய உணர்வு இல்லை. சிவா சாதாரணமாக 'பாரில்' சென்று மது அருந்துவது இல்லை. அவன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் அவன் தங்கியிருக்கும் அறையே சனிக்கிழமை இரவுகளில் அவன் நண்பர்களின் விருப்பமான பார் ஆகிவிடும்.

அந்த அரையிருட்டு அறை முழுவதும் ஒரு மேசை கூட காலியாக இல்லை. முற்றிலும் நிறைந்திருக்கவுமில்லை. ஒரே ஒரு மேசையில்தான் ஒருவர் தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். மேலும் மூன்று நாற்காகள் காலியாக இருந்தன. அவருக்கு நேரெதிர் இருந்த நாற்காலியை தவிர்த்து அடுத்த நாற்காலியில் அமர்ந்தான் சிவா.

 
வெயிட்டர் கொடுத்த விலைப்பட்டியலை மூன்று வருடங்களுக்கு முன் சிவா பார்த்திருந்ததால் மயக்கமே போட்டு விழுந்திருப்பான். தற்போதய வேலையும் ஐந்து இலக்க சம்பளமும் அவனுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. முதல் முறையாக இரயிலில் குளிர்சாதன படுக்கை வசதியை அனுபவித்திருக்கிறான் மற்றும் இந்த நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதியில் தங்கும் வசதி. முழுக்க முழுக்க நிறுவனத்தின் செலவு, மது அருந்துவது தவிர. அதுவும் அடுத்த ப்ரொமோஷனில் கிடைக்கும் என்று வர்மா சொன்னார்.விலைப்பட்டியலில் இருந்த எந்த ஒரு பானமும் அவனுக்கு தெரிந்த நிறுவனங்களின் தயாரிப்பாக இல்லை. விலையை வைத்துதான் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். வெயிட்டரை அழைத்து ஒரு லார்ஜ் ரம்மும் கோலாவும் ஆர்டர் செய்தான்.

"
தம்பி தமிழா?" என்றார் எதிரில் இருந்தவர்.

அவருக்கு நாற்பது வயதிருக்கலாம். அவர் காலரில்லாத பனியனும், முழங்கால்வரை நிறைய பைகள் வைத்து தைத்த 'ட்ரௌசரும்' அணிந்திருந்தார். முகத்தில் குறுந்தாடியும், ப்ரேம் இல்லாத கண்ணாடியும் அமர்ந்திருந்தன. இதன் காரணமாக, இந்த உருவத்திற்குள்ளிருந்து வந்த 'தமிழ்' சிவாவை வியப்பிலாழ்த்தியது.
"ஆமாங்க" என்றான்

அவர், "கோயம்புத்தூர் பக்கமா?" என்றார்
"ஆமாங்க ஈரோடு"

"அப்டி போடுங்க, எனக்கு சென்னிமலதான். எப்பிடி கண்டுபுடிச்சேன் பாத்திங்களா? நாட்டுக்கு நாடு மட்டுமில்ல ஊருக்கு ஊரு கூட ஒரு மொக அடையாளம் இருக்குது" என்றார்.
அதை ஆமோதிக்கவோ எதிர்க்கவோ இல்லாமல் மத்தியமாய் சிரித்துவைத்தான் சிவா.

 
"பைதிபை என்பேரு ராக்கியப்பன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஷாட்டா 'ராக்கி'ன்னு கூப்டுவாங்க" என்றார்.

அவர் உருவத்திற்கு 'ராக்கி'தான் பொருத்தமாக இருந்தது.
"நான் சிவக்குமார்" என்றான்.

அதற்குள் வெயிட்டர் வந்து ஒரு கிளாசில் ரம்மையும், கோலா பாட்டிலையும் வைத்தான்.

"டேய் அரசு, சார்  நம்ப ஊரு, டச்சர் எல்லாம் சூப்பரா இருக்கணும்" என்று சொல்விட்டு சிவாவை பார்த்து, "இவனும் தமிழ்தான் திருநெல்வேலி  பக்கம்" என்றார்.

அவனும் சிவாவை பார்த்து "வணக்கம் சார்" என்றான். அவன் ஏற்கனவே மாதுளம்பழ மணிகள், வெள்ளரித் துண்டுகள், அவித்த கடலை, முறுக்கு போன்ற ஒரு சமாச்சாரம் ஆகியவைகளை அடுக்கியிருந்தான். திரு. ராக்கி அவர்களின் சிபாரிசின் பேரில் சுடச்சுட ஏதோ ஒரு திண்பண்டத்தையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான்.

"
அப்புறம் சிவா எங்க வேல பாக்கறிங்க? பெங்களூருக்கு என்ன ஆபிஸ் விஷயமாவா? இல்ல பர்ஸனலா?" என்று கேட்டார்.

"
மெட்ராஸ்ல கேர்வெல் க்ரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ்ல சீனியர் அக்கௌண்ட்ஸ் ஆபிஸரா இருக்கேன். இங்க எங்க ப்ரான்ச்சுக்கு ஆடிட்டிங் வந்தேன்"

"
அடடே கேர்வெல்லா பெரிய க்ரூப்பாச்சே ஒங்க பர்சேஸ் ஆபிஸர் ஷ்யாம் எனக்கு ரொம்ப க்ளோசு, நான் மெடிலேப்ஸ்ல ரீஜினல் மேனஜரா இருக்கேன் நாங்க நெறய மெடிசன் சப்ளை பண்றோம் ஒங்க ஹாஸ்பிடலுக்கு"

"
மெடிலேப்ஸா? இன்வாய்ஸ் பாத்திருக்கேன்"

"
ஸீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்ங்கறிங்க ரொம்ப யங்கா இருக்கீங்க C.A.வா?

"
ஆமாங்க ஆல் இண்டியா எய்ட்த் ரேங்க்"

"அப்டி போடுங்க ரொம்ப சந்தோஷம், இந்த சின்ன வயசுல இவ்ளோ பெரிய போஸ்ட்ல இருக்கீங்க கல்யாணம் ஆகலேல்ல"
"ஆமாம்"

"
ஒன்னும் அவசரமில்ல லைஃப்ப நல்லா என்ஜாய் பண்ணுங்க அப்புறமா பண்ணிக்கலாம்... இங்கதான், தாய்லாந்துல, 'பட்டையா'ன்னு ஒரு ஊரு எங்க ஏன்வல் கான்ஃபரன்ஸ் அங்கதான் நடந்துது. அடா அடா என்னா மாதிரி ஊரு என்னா மாதிரி ஃபிகருங்க, காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் பந்த் மாதிரி ஊரே அடைஞ்சு கிடக்கும். ஆறுமணிக்குமேல பாத்தா, ரோடுபூரா கலர்கலரா லைட்டு, ஊரு பூரா க்யூப் பார், லைவ் ஷோ, கொத்து கொத்தா பொண்ணுங்க எல்லாம் 14 இருந்து 18க்குள்ள. ஒரு க்யூப் பார்ல போயி உக்காந்து ஒரு பீர் ஆர்டர் பண்ணா போதும் இந்த தொடைல ஒன்னு அந்த தொடைல ஒன்னு வந்து உக்காந்துக்கும், டச்சரே வேணாம்.." என்று சொல்விட்டு சிரிக்கவாரம்பித்தார்.

சிவாவின் மனக்கண்ணில் வளர்மதி வந்து, "மென்னிய திருகிப் போடுவேன்" என்றாள்.

"
முக்கியமா மசாஜ் பார்லர்ங்க, விதவிதமான மசாஜ்... சான்ட்விச் மசாஜ்  னு கேள்விப்பட்ருக்கீங்களா?" என்றபடி கொஞ்சம் விகாரமாக சிரித்தார்.
"இல்ல"
"... ... அதெல்லாம் சொல்லமுடியாது அனுபவிச்சுப்பாக்கணும்... ரொம்ப ஒன்னும் செலவாகாது ஒரு முப்பது ரூபா இருந்தா போறும் பேக்கேஜ் டூர்ல போயிட்டு வந்துறலாம்"

"
ஐயயோ.. முப்பதாயிரமா? அவ்ளோ பணம் சேக்கறதுக்கு ஒரு வருஷத்துக்கு மேல ஆகுமே"

அவர் 'ப்ளக்' என்று ஒரு சிரிப்புடன், "என்ன சிவா கிண்டல் பண்றீங்களா? முப்பதாயிரம் சேத்துறதாமே!... கிரெடிட் கார்டு வெச்சுருக்கீங்களா?"

சிவாவுக்கு பெட்டியில் இருக்கும் கார்டு அப்ளிகேஷன் ஞாபகம் வந்தது, "எனக்கு யூஸ் இல்லீங்களே" என்றான்.

"
என்னது? ஹா... ஹா..." என்று அவர் சிரித்த சிரிப்பில் பக்கத்து இரண்டு டேபிள்காரர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.
"கிரெடிட் கார்டுனால யூஸ் இல்லியா...? நீங்க கேப்ஸ்யூல் யுகத்தில இருக்கீங்க மறந்துடாதிங்க. இன்னிக்கு உலகமே சின்ன கேப்ஸ்யூல் சைசுக்கு ஆயிடுச்சு காசு மட்டும் இருந்தா உலகத்தை பொட்டலம் கட்டி பாக்கட்ல போட்டுக்கலாம். காசுகூட நம்ப அப்பன் ஆத்தா சம்பாரிச்சு வச்சதுதான்னு அவசியமில்ல இங்க பாருங்க" என்று ஒரு லெதர் வேலட்டை திறந்து காண்பித்தார். கிட்டத்தட்ட குலுக்கிப் போட்டு ரம்மி ஆடும் அளவுக்கு கிரெடிட் கார்டுகள் இருந்தன.

"
நான் ஒரு பேங்க் உடறது கெடையாது. மொத்த கிரெடிட் லிமிட் அஞ்சு லச்சத்துக்கும் மேல"

"
இன்ட்ரஸ்ட் எக்கச்சக்கமா போடறாங்களே" என்றான்.

"
அட... இன்ட்ரஸ்ட்ட உடுங்க எவன் நம்பள நம்பி இவ்வளோ பணம் தருவான்? மறந்து போச்சா? நம்ம அப்பனும் ஆத்தாளும் பத்தாயிரத்துக்கு நகையையும், பத்தரத்தையும் தூக்கிக்கிட்டு பேங்குக்கு அலைஞ்சதெல்லாம்"

சிவாவுக்கு அம்மாவின் அட்டிகை இன்னும் பேங்கில் இருப்பது நினைவுக்கு வந்தது. நகை அடகு வைக்கக்கூட எத்தனை நிபந்தனைகள்? குறிப்பிட்ட தினத்தில்தான் கொடுப்பார்கள். அன்று 'அப்ரைஸர்' வரவில்லை என்றால் அடுத்த வாரம்தான். அதுவும் அதே பேங்கில் அக்கௌண்ட் இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லாவிட்டால் அக்கௌண்ட் உள்ளவரின் சிபாரிசு வேண்டும். இப்பொழுதெல்லாம் ஒரு நல்ல வேலை இருந்துவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு கடன்தர எத்தனை நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

"
இப்ப என்னை எடுத்துக்கங்க வீடு லோன்தான், காரு லோன்தான், பர்ஸனல் லோன் எல்லாம் சேத்து ஒரு செக்யூரிட்டியும் இல்லாம, எவனெவனோ சேந்து இருபது லட்சம் குடுத்துருக்கானுங்கன்னா பாருங்களேன்!"

சிவாவின் C.A. மூளை வேகமாக கணக்குப் போட்டு மாதம் இருபதாயிரத்துக்கு மேல் வட்டி மட்டும் கட்டவேண்டும் என்றது. சிவா அவரை ஒரு முறை கூர்ந்து பார்த்தான். அவரைப் பார்த்தால் இருபது லட்சரூபாய் கடனாளியாய் தெரியவில்லை. சிவாவின் அப்பா மூத்த பெண் கல்யாணத்திற்கு வாங்கிய இருபதாயிரம் கடனுக்காக இரண்டு மாதம் ஷேவ் செய்யாமல் அலைந்தது ஞாபகத்திற்கு வந்தது.

"
ஒரு கிரெடிட் கார்டுதான் நானா அப்ளை பண்ணேன். அதுக்கப்புறம் மத்தவனெல்லாம் வெரட்டி வெரட்டி குடுத்தானுங்க. நீங்க பாத்தது எல்லாம் கிரெடிட் கார்டு இல்ல. மூணு பிரிவிலைட்ஜ் கார்டும் இருக்குது . இது வீடு தேடி வர்ர ஸ்ரீதேவி மாதிரி மத்த கிரெடிட் கார்டு கணக்கு வழக்கை பாத்துப்பிட்டு ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் அனுப்புவான் இந்த கார்டை யூஸ் பண்ணி நீங்க எந்த பொருள் வேணா வாங்கிக்கலாம் மாசாமாசம் .ஸி இன்ஸ்டால்மெண்ட்ல கட்னா போதுமின்னு, என் பொண்டாட்டி பாத்தா உடுவாளா? என் வீட்ல வந்து பாருங்க ஒரு பெரிய ஹோம் அப்ளையன்ஸ்ஸஸ் கடைல இருக்கற ஒரு பொருள் இல்லேண்ணா என்னன்னு கேளுங்க. இதையெல்லாம் காச சேத்துவச்சு வாங்கமுடியுமா?"

சிவாவுக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது.

"சிவா, ஒரு அஞ்சு வருஷத்துல இந்தியாவோட மாற்றத்தப் பாத்திங்களா? முன்னெல்லாம் அம்பாஸிடரும் ஃபியட்டும்தான் ரோட்ல ஓடும். மாருதியையே என்னமோ ஃபாரின் கார் மாதிரி பாப்பாங்க. இப்ப எந்த இண்டர்நேஷனல் கம்பெனி காரு இந்தியாவுல இல்ல சொல்லுங்க. அட... பேங்குக்கு போயி நம்ப போட்ட பணத்த எடுக்கணுமுன்னா மதியம் ஒரு மணிக்குள்ள போகணும். டோக்கன் வாங்கிட்டு பெரியாஸ்பத்திரில உக்காரர மாதிரி உக்காரணும். இப்ப பாருங்க கார்ப்பரேட் பேங்குக்காரன் முக்குக்கு முக்கு ATM வச்சுட்டான். நைட் ஒரு மணிக்கு டிஸ்கோத்தே முடிச்சுட்டு போய் கார்டை சொருகுனா பொல பொலன்னு பணம் கொட்டுது. அதுகூட முடியாதவங்க வீட்ல இருந்தே போன் பண்ணுனா
பணத்தை பார்சல் பண்ணி வீட்டுக்கே கொண்டுவந்து தர்றான். இப்போ வீட்ல ஒரு கம்ப்யூட்டர் வாங்கி இண்டர்நெட் கனெக்ஷன் குடுத்துட்டா உக்காந்த இடத்துலயே உலகத்தையே சுத்தி வந்துறலாமே. கிரெடிட் கார்டும் இருந்துட்டா உலகத்தையே வாங்கி அலமாரியில அடுக்கிடலாமே, அதுனாலதான் சொன்னேன் நாம கேப்ஸ்யூல் யுகத்துல இருக்கமுணு. ஆனா நம்பாளுங்க இன்னும் ஐம்பது வருஷம் பின்னாலதான் இருக்காங்க. எங்க அம்மாவையே எடுத்துக்கங்களேன், எழுபத்துரெண்டு வயசாகுது. இன்னும் தோட்டத்துல மண்ண கொத்திக்கிட்டு இருக்குது. எங்கூட வந்துருன்னா தோட்டத்தை யார் பாப்பா?ங்குது. தோட்டம்னா ஒன்னும் பெரிய ஃபார்ம் கெடையாது. வெறும் அஞ்சு ஏக்ரா, அதுல எங்க அப்பா சமாதி இருக்கு. அதனால அத விக்கக்கூடாதாம். தனக்கும் அதும்பக்கத்திலதான் சமாதி கட்டணும்ங்குது. சரி தொலையுதுன்னு மாசம் ஒரு ஆயிரம் ரூபா அனுப்பட்டுமான்னு கேட்டா "எனக்கெதுக்கு கண்ணு காசு, இங்க வெளயறத புடுங்கி திண்ணாலே போதும். மேல எதுனாச்சும் வேணுமுன்னா மிச்சம் இருக்கற காய்கறிய சந்தைல போட்டு வாங்கிக்குவேன். புள்ளைங்களுக்கு எதுனாச்சும் வாங்கிக் குடுங்குது. அதோட உலகம் அஞ்சு ஏக்கர்தான்."

இதற்குள் அவருக்கு மூன்று 'லார்ஜ்'கள் வந்துவிட்டன. சிவா முதல் லார்ஜையே இன்னும் முடிக்கவில்லை.

"என்ன சிவா ரொம்ப ஸ்லோவா போறீங்க?"

"
கோலா ரொம்ப கோல்டா இருக்கு, நேத்திலருந்து எனக்கு கொஞ்சம் கோல்டு"

"
அட அவ்வளதான அடுத்த லார்ஜ் நான் சொல்ற காம்பினேஷன்ல அடிங்க நாளைக்கு காலைல லங்ஸ்ஸு கிளீனாயிடும்"

"
அரசு" என்று உரக்கக் கூப்பிட்டார். அவருக்கு ஓரளவு போதை ஏறியிருந்தது அவர் குரலின் உச்சஸ்தாயில் தெரிந்தது. அரசு ஓடிவந்தான்.
"சாருக்கு அடுத்த லார்ஜ் ஜிஞ்சர் லெமன் போட்டு கொண்டா"என்றார்.

"
எதுக்கு சார்? எனக்கு ஏற்கனவே பித்த ஒடம்பு ரிஸ்க் வேணாமே"

"
எடுக்கணும் சிவா லைஃப்ல ரிஸ்க் எடுக்கணும். என்னப்பார் இந்தக் கம்பெனி எனக்கு பதிமூணாவது கம்பெனி. பதினஞ்சு வருஷத்துல பதிமூணு கம்பெனி மாறிட்டேன். அதுனாலதான் இன்னிக்கு அலவன்ஸ் எல்லாம் சேத்து மாசம் அறுபதாயிரம் வாங்கறேன். ரிஸ்க் எடுத்தாதான் லைஃப் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்" என்றபடி மீதமிருந்த பாதி கிளாசை ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.

"
ஒங்க மிஸஸும் வேலைக்குப் போறாங்களா?" இந்த கேள்வி அவரது முகத்தில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. சற்று நேரம் தலையை கவிழ்ந்து கொண்டிருந்தார். மெதுவாக ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கூர்ந்து கேட்டதில், "பிட்ச்... பிட்ச்..." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, "வேலைக்குப்போய் கிழிச்சா... திங்கத் தெரியும்... தூங்கத் தெரியும்... சீவி சிங்காரிச்சுட்டு அலைய தெரியும்... சிவா கல்யாணம் பண்ணிக்காதடா.. வேணாம்" என்றார்.

இப்போது வாய் குழற ஆரம்பித்திருந்தது. "அழசு ரிப்ப்பிட்" என்றார்.

சிவாவுக்கு இப்பொழுது சற்று பயமாக இருந்தது, அரசுவைப் பார்த்து,

"ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு போல இருக்கே" என்றான்.

"
டோண்ட் ஒர்ரி, ஐம் ஆல்ரைட் சிவா இப்ப பார், கரெக்டா டாய்லட் போய் 'உச்சா' போய்ட்டு வர்றேன் பார்" என்றபடி எழுந்து நடக்கவாரம்பித்தார். நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தாலும் சரியாக டாய்லட்டில் நுழைந்துவிட்டார்.
"அவர் ரெகுலர் கஸ்டமர்தான் ஸார். ஒன்னும் ப்ராப்ளமில்ல பக்கத்துலதான் வீடு" என்றான் அரசு."சரி எனக்கு பில்" என்றான் சிவா.

சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு லார்ஜும் சிவாவுக்கு பில்லும் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனான். அதற்குள் அவரும் டாய்லெட்டிலிருந்து வந்துவிட்டிருந்தார். இப்போது முகம் சற்று தெளிவாய் இருந்தது.

"
என்ன சிவா அவ்வளோதானா?" என்றார் பில்லை பார்த்தபடி
ஏற்கனவே அவர் ஆர்டர் செய்தபடிக்கு வந்திருந்த அந்த விநோத கலவையை பாதி குடித்ததில் சிவாவுக்கு நெஞ்சும் தொண்டையும் எரிந்து கொண்டிருந்தது. அவன் சாதாரணமாக ஒரு குவாட்டருக்கு ஒண்ணரை லிட்டர் கோலா வாங்குபவன். இது போன்ற அதிரடிகள் இன்னும் அவனுக்கு பழகவில்லை.

"சாரி  அவளப்பத்தி கேட்டதுனால கொஞ்சம் டென்ஷனாயிட்டேன்" என்றபடி அடுத்த லார்ஜையும் அடிக்கவாரம்பித்தார்.

"
சிவா நான் ஒங்ககிட்ட ஒரு பொய் சொல்ட்டேன். நான் இப்ப மெடிலேப்ஸ்ல இல்ல ரிûஸன் பண்ணி நாலு மாசம் ஆகுது" என்றார்.
"சாரி... ஏதாவது ப்ராப்ளமா?"

"
என்ன ப்ராப்ளம்...? சேல்ஸ் குடுத்தா ப்ராப்ளமில்ல இல்லேன்னா ப்ராப்ளம்தான்... பொண்டாட்டி புள்ளங்களெல்லாம் விட்டுட்டு நாயா அலஞ்சேன்... நன்றிகெட்ட நாயிங்க..."

சிவா மெதுவாய், "விடுங்க, ஒங்க எக்ஸ்பீரியன்ஸ÷க்கு வேற வேல கெடைக்காதா?" என்றான்.

"
அப்பிடித்தான் பதிமூணு கம்பெனி மாறுனேன்... எல்லாருமே ஒரு தேவிடியா வயித்து புள்ளைங்கதான்..." என்றபடி மிச்சத்தையும் ஒரே மிடறில் குடித்து முடித்தார். இப்பொழுது திரும்ப மவுனமாகிவிட்டார், தலையை தொங்கப் போட்டுக் கொண்டார். மெதுவாக முனகுவது கேட்டது,

"பாஸ்டர்ட்ஸ்... பாஸ்டர்ட்ஸ்... பாஸ்டர்ட்ஸ்"

"
இவனுகதான் பழக்கிவுட்டானுங்க... மொதோ மொதோ கம்பெனி கான்பரன்ஸ்லதான் நான் தண்ணியடிச்சேன். இன்னிக்கு நிறுத்த முடியல"

குரல் குழைந்து போயிருந்தது, "யார் கேட்டா ஸ்டார் ஹோட்டல் ஸ்டே?... யார் கேட்டா ஃப்ளைட் பயணம்?... இவனுக தேவைக்கு என்னை பலி குடுத்துட்டானுங்க, படிக்கிறப்ப தெனம் சென்னிமலையில இருந்து பெருந்துறைக்கு சைக்கிள்ள வந்து போவேன். இப்ப பக்கத்துத் தெருவுக்குக்கூட கார் கேக்குது... இன்னிக்கோ நாளைக்கோ அதையும் புடுங்கிட்டு போயிடுவானுங்க... இன்ஸ்டால்மெண்ட் கட்டி ஆறு மாசம் ஆச்சு. வீட்டுக்கும் நோட்டீஸ் வந்துருச்சு... அதப்பாத்துட்டுதான் அவ போயிட்டா அவங்கப்பன் வூட்டுக்கு, மயிரே போச்சுன்னு... புள்ளைங்களையும் கூட்டிக்கிட்டு போயிட்டா... நான்தான் இப்ப அநாத..."

அவர் இப்போது சன்னமான குரலில் அழவாரம்பித்திருந்தார். சிவாவின் நிலை தர்மசங்கடமாயிற்று. இப்போது திரும்ப தலையை கவிழ்த்துக் கொண்டார். இப்பொழுது முனகுவது சரியாய் புரியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கர்சீப்பை எடுத்து முகத்தை நன்றாக அழுத்தித் துடைத்துக் கொண்டார்.

"
எல்லாத்துக்கும் ஒரு வழி கண்டுபுடிச்சிட்டேன்" என்றபடி சட்டைப்பையில் இருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து அதனுள் இருந்த ஒரு கேப்ஸ்யூலை வெளியே எடுத்தார்.

"இத பாத்தியா இது என்ன வெல தெரியுமா? ஒன்னால சத்தியமா சொல்லமுடியாது. இது வெல ஏழாயிரம் ரூபா... சிங்கப்பூர்லர்ந்து வரவழைச்சேன் இத சாப்ட்டா சரியா ஒரு மணி நேரத்துக்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துடும்... போஸ்ட் மார்டத்துல கூட கண்டுபிடிக்க முடியாது. ரியல் அட்டாக்னுதான் எழுதுவாங்க... கிரெடிட் கார்டோட முக்கியமான அட்வான்டேஜ நான் சொல்லலையே... ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல இன்ஸ்யூரன்ஸ் இருக்கு. அது தவிர கஐஇ யூனிட் ட்ரெஸ்ட்டுன்னு சேத்து கடனெல்லாம் அடைஞ்சு கைல கொஞ்சம் காசு நிக்கும். இதக்கூட நான் அந்த கழுதைக்காக செய்யல, என் சின்ன பொண்ணு மஞ்சு... மஞ்சு... அவள ஒரு தடவ பாத்துட்டா நிம்மதியா போயிடுவேன்..." மறுபடியும் தலையை கவிழ்த்துக் கொண்டார்


இப்பொழுது"மஞ்சு... மஞ்சு... மஞ்சு..." என்று முனகிக் கொண்டிருந்தார்.
அரசு வந்து மீதிப் பணத்தையும் பில்லையும் வைத்தான். சிவா வைத்த பத்து ரூபாய் டிப்ஸ்ஸ÷க்கு, "தேங்க்ஸ் சார்" என்றான். "அவர் ரொம்ப டிஸ்டர்பா இருக்கார் போருக்கே" என்றதற்கு, "நீங்க கௌம்புங்க சார், இது ஏஸ்யூஸ்வல்தான் கொஞ்ச நேரம் கழிச்சு அவரே கிளம்பி போய்டுவார்" என்றான்.

அடுத்த நாள் முழுநேர அலுவ லில் ராக்கியின் நினைவே சிவாவுக்கு வரவில்லை. திரும்ப ஹோட்ட லில் நுழையும் போது 'பார்' கதவில் 'க்ளோஸ்டு' என்ற போர்டை பார்த்தான். செக்யூரிட்டியிடம் கேட்ட பொழுது நேற்று இரவு பாரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அதனால்தான் திறக்கவில்லை என்றும் சொன்னான். அதற்குமேல் அவனுக்கு விஷயம் ஒன்றும் தெரியவில்லை.